கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர் மூச்சுத்திணறி திடீர் மரணம்

By காமதேனு

பொன்னேரியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(36) இவர் எம்.பி.ஏ, பி.எச்.டி படித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். பொங்கல் என்பதால் விடுமுறையைக் கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் பொன்னேரி அருகில் உள்ள கம்மார்பாளையம் பகுதியில் பொங்கலை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார்.

அப்போது விளையாடிக் கொண்டு இருக்கும்போதே மனோஜ்குமார் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடன் விளையாடிக் கொண்டு இருந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு,அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மனோஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பொன்னேரி போலீஸார் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததுடன் இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர் திடீர் என உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE