கரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

By காமதேனு

கரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

கரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் உலகம் முழுவதும் மிரட்டத் தொடங்கியுள்ளது. உருமாறிய பிஎப் 7 கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை பணிகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன.

தமிழகத்தில் புதிய வகை கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," தமிழகத்தில் புத்தாண்டு, சமய விழாக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுகளைத் தான் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE