பெட்ரோலை ஊற்றி உயிருடன் இருவர் எரித்துக் கொலை: கர்நாடகாவில் பயங்கரம்

By KU BUREAU

பாகல்கோட்டில் பெட்ரோலை ஊற்றி இரண்டு பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பெலகாலி நகரில் பண்ணை வீட்டின் அருகில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மொத்த குடும்பத்தினரை உயிருடன் எரித்துக் கொல்லும் நோக்கில் மரக்கொட்டகையின் கதவைப் பூட்டி பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர். இதில் ஜெய்பன் பெண்டாரி(60), ஷபானா பெண்டாரி(22) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். தஸ்தகிர் பெண்டாரி(60), சுபன் பெண்டாரி(26) ஆகியோர் பலத்த காயங்களுடன் முதோல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதோல் காவல் நிலைய பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து எஸ்பி அமர்நாத் ரெட்டி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்துள்ளது. முதலில் கொட்டகையை வெளியில் இருந்து பூட்டிய மர்மநபர்கள், கொட்டகையை ஒட்டியிருந்த சின்டக்ஸ் தொட்டி மீது சுமார் 100 லிட்டர் பெட்ரோலை ஊற்றினர். இதன் 2 ஹெச்பி இயந்திரத்தில் இருந்த பெட்ரோலை கொட்டகையைச் சுற்றி ஊற்றி தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீயினால் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது.

நிலத்தகராறு, குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலைகள் நடைபெற்றதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பாகல்கோட் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE