9 ஆண்டுகளாக காத்திருந்து ரவுடியை கொலை செய்த வாலிபர்: அண்ணன் கொலைக்குப் பழிக்குப்பழி

By ரஜினி

தனது அண்ணனைக் கொலை செய்த ரவுடியை 9 ஆண்டுகள் காத்திருந்து அவரது தம்பி வெட்டிக்கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு காந்தி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ரவுடி சேட்டு என்ற கார்த்திகேயன் (36). இவர் கடந்த 2013-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரஞ்சித் என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கில், கைது செய்யப்பட்டு கடந்த 14-ம் தேதி சிறையில் இருந்து சேட்டு வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.05 மணியளவில் புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பொது கழிப்பறை உட்புறம் வைத்து ஒரு கும்பல் சேட்டுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச்சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவுடி சேட்டை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சேட் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து பிரிட்ஜ் பேசின் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், 2013 -ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தின் சகோதரர் பிரேம் தனது கூட்டாளிகளான நாய்க்கடி கார்த்தி உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து ரவுடி சேட்டை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் தலைமறைவாக உள்ள பிரேம் ,நாய்க்கடி கார்த்திக் உள்ளிட்டோரை தேடிவருகின்றனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ரவுடியை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE