பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்: பாம்புடன் போட்டோ எடுக்கையில் உயிரிழந்த இளைஞர்!

By KU BUREAU

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பாம்புடன் புகைப்படம் எடுக்க நினைத்த இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டம் சிகாலியைச் சேர்ந்தவர் சந்தோஷ் ஜக்டேலின். இவர் தனது 31வது பிறந்த நாளை வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இதன் பின் அன்று மாலையில் நடைபெற்ற விருந்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சந்தோஷின் நண்பர்களான கஜானன் நகரைச் சேர்ந்த தீரஜ் பண்டிட்கர் மற்றும் ஆரிப் ஆகியோர் அவரது பிறந்த நாளைக் கொண்டாட வீட்டிற்கு வந்திருந்தனர். வீட்டில் விழா நடந்த பின்பு சந்தோஷை பிறந்த நாளைக் கொண்டாட வெளியே அழைத்துள்ளனர். இதனை ஏற்று சந்தோஷ் ஜக்டேலும் நண்பர்களுடன் சென்றார்.

அப்போது சந்தோஷ் ஜக்டேலின் நண்பர் ஒருவர் போட்டோ எடுப்பதற்காக விஷம்பாம்பை கொண்டு வந்திருந்தார். அந்த பாம்பை கையில் பிடித்தவாறு போட்டோ எடுப்பதற்காக சந்தோஷ் ஜக்டேல் போஸ் கொடுத்துள்ளார். அப்போது கையில் இருந்த பாம்பை அவரைக் கடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாம்பை கொண்டு வந்திருந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். உடனடியாக சந்தோஷ் ஜக்டேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொணடு செல்லப்பட்டார். ஆனால், அவர் பாம்பு விஷத்தால் உயிரிழந்தார்.

இதையடுத்து பாம்பு கொண்டு வந்த நண்பர்கள் மீது சந்தோஷ் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். பாம்பு கடித்து இறந்த சந்தோஷ் ஜக்டேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE