உத்தர கன்னடா மாவட்டத்தில் கனமழை: இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்

By KU BUREAU

கர்நாடகாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், உத்தர கன்னடா மாவட்டத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அத்துடன் தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

இது தொடர்பான வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று முதல் 3 நாட்களுக்கு மாவட்டத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவே, மக்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகல்கோட், பிதார், தார்வாட், கடக், ஹாவேரி, கலபுர்கி, கொப்பல், ராய்ச்சூர், விஜயப்பூர், யாத்கிரி ஆகிய வடக்கு உள்மாவட்டங்களில் காற்றின் வேகம் (மணிக்கு 30-40 கிமீ) எட்டக்கூடும். இதனால் லேசானது முதல் மிதமான மழை/இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பெல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூர் மாநகர், சாமராஜநகர், சிக்கபள்ளாப்பூர், சித்ரதுர்கா, தாவண்கெரே, ஹாசன், கோலார், மாண்டியா, மைசூர், ராமநகரா, தும்கூர், விஜயநகர் மாவட்டங்களில் பல இடங்களை காற்றின் வேகம் (மணிக்கு 30-40 கி.மீ.) எட்டக்கூடும். இதனால் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE