ரயில் நிலையத்தில் நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: போலீஸார் விசாரணை!

By KU BUREAU

ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி ரயில் நிலையத்தில் கோடாரியால் தாக்கிய இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்டவர்கள் கொள்ளையர்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுற்றுச்ச்சாலையில் தப்பிச் சென்ற கும்பலைப் பிடிக்க முயன்றபோது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மீண்டும் அப்படியொரு சம்பவம் ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் உள்ள நம்பல்லி ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது.

நம்பள்ளி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு பேர் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது திடீரென கோடாரி மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். மற்ற இருவரையும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். அதில் காயமடைந்து கீழே விழுந்தவர்கள் உடனடியாக, உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ராஜ் என அடையாளம் தெரிந்தது. தப்பியோடிய இருவர் யார் என்பதுடன், பிடிபட்டவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE