விவாகரத்துக்குப் பின் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோர முடியும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

By KU BUREAU

விவாகரத்துக்குப் பிறகு முஸ்லிம் பெண்களும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியும் என உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது.

பிரிந்து வாழும் மனைவிக்கு ரூ.10,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முகமது அப்துல் சமத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

சட்டப்பிரிவு 125வது பிரிவின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கான உத்தரவுக்கு எதிராக முகமது அப்துல் சமத் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக அவர்கள் வழங்கிய தீர்ப்பில், முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 மதச்சார்பற்ற சட்டத்தை மீற முடியாது என்று கூறியுள்ளனர். நீதிபதி நாகரத்னா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் தனித்தனியாக, ஆனால் ஒருமித்த தீர்ப்புகளை வழங்கினர்.

அப்போது, சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது. ஜீவனாம்சம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களைச் சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE