27 பேரும் குற்றவாளிகள்: ஆக. 3-ல் தண்டனை அறிவிப்பு: கச்சநத்தம் கொலை வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

By மு.அஹமது அலி

கச்சநத்தத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் புகுந்து சிலர் கச்சநத்தம் கிராம மக்களை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக அருகில் உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ், பிரசாந்த் உள்ளிட்ட 33 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதில், அக்னிசாமி, பிரசாந்த் ஆகியோர் உயிரிழந்தனர்.

இது குறித்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமம் மற்றும் நீதிமன்றத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு குற்றவாளிகளாக கருதப்படுபவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் கூடினர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை ஆகஸ்ட் 1-ம் தேதி வழங்குவதாக ஒத்திவைத்து அறிவித்தார். அதன்படி, இன்று மாலை தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன், வழக்கில் தொடர்புடைய 27 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். மேலும், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE