ஹாத்ரஸ் சம்பவத்தில் நடவடிக்கை அவசியம் - முதன்முறையாக ஊடகத்திடம் பேசிய போலே பாபா

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் முதன்முறையாக ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் அவர், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்துள்ள பேட்டியில், "நாம் ஜூலை 2 சம்பவத்துக்கு பின் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க வேண்டும். அனைத்தையும் விசாரித்து வரும் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இந்த விசாரணையில் இறங்கியுள்ள குழுவின் அனைத்து உறுப்பினர்களும், அதிகாரிகளும் நியாயம் வழங்குவார்கள். நாம் பலியானவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்கள் நலனில் உடன் இருப்பதாக எங்கள் வழக்கறிஞர் டாக்டர்.ஏ.பி.சிங் மூலமாக விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். தற்போதைக்கு அரசின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அனைவரது கடமை. இதற்கான ஆக்கமும், ஊக்கமும் அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.

உபி காவல் துறையின் சாதாரணக் காவலராக இருந்த சூரஜ் பால் ஜாத்தவ், பாலியல் வழக்கு ஒன்றில் கைதானதால் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். சிறைவாசத்துக்குப் பின் விடுதலையானவர் தம் பெயரை நாரயண் சாக்கா விஷ்வ ஹரி என மாற்றிக் கொண்டார். தனது சொந்த கிராமத்தில் ஆன்மிகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டவரை கிராமவாசிகள் போலே பாபா என அழைக்கத் துவங்கினர். தொடர்ந்து உபி, ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களையும் அமைத்துள்ளார்.

இவர் கடந்த ஜூலை 2ல் ஹாத்ரஸின் சிக்கந்தராராவின் முகல்கடி கிராமத்தில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் விபத்து நிகழ்ந்தது. இதில், 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியாகி விட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின் தலைமறைவான போலே பாபா, பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. தற்போது தாம் இருக்கும் இடத்தை குறிப்பிடாமல் செய்தி நிறுவனம் ஒன்றிடம் போலே பாபா முதன்முறையாக மெளனம் கலைத்து நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE