குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில், டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடந்த போராட்டம் மிக முக்கியமானது. பெருமளவில் பெண்கள் திரண்டு போராடிய அந்தப் போராட்டம் 101 நாட்கள் நீடித்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதி பெறாத கட்டிடங்களை இடிக்கும் பணிகளை தெற்கு டெல்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது.
ஷாஹீன் பாக் பகுதியில் ரோஹிங்யாக்கள், வங்கதேசத்தவர் மற்றும் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, தெற்கு டெல்லி மாநகராட்சி மேயரான முகேஷ் சூரியனுக்கு ஏப்ரல் 20-ல் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமையே இந்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எனினும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் போதுமான காவலர்கள் இல்லாததால், இன்று (மே 9) ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. மே 13 வரை இந்தப் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதக் கட்டிடங்களை புல்டோசர்கள் இடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அங்கு ஏராளமான போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
கட்டிடங்களை இடிக்கும் பணிகளுக்கு எதிராக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி காங்கிரஸ் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவாகக் குழுமியிருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
சமீபத்தில் டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அங்குள்ள சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.