'எங்களது வார்த்தைகளை தமிழகம் செவிமடுப்பதில்லை': மோடி திடீர் குற்றச்சாட்டு!

By காமதேனு

இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் இன்று ஆய்வு நடத்தினார். அப்போது பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “எரிபொருள் மீதான வரியை 2021 நவம்பர் மாதமே மத்திய அரசு குறைத்து விட்டது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும். வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்" என்றார்.

மேலும்," தமிழகம் உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளை செவிமடுப்பதில்லை. இதனால் இந்த மாநில மக்கள் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர். மராட்டியம், தெலங்கானா, மேற்குவங்கம், ஆந்திரா, தமிழகம், கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் சில காரணங்களால் அதை கேட்கவில்லை.

இதனால் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது ஒரு வகையில் மாநில மக்களுக்கு செய்யும் அநீதிதான். இது அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த மாநிலங்கள், பெட்ரோல் - டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும். பொருளாதார முடிவுகளில் மத்திய, மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பு மிக அவசியம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE