18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்!

By காமதேனு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சனிக்கிழமை (ஏப்.10) முதல் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படும் என அறிவித்திருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத் துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ்கள் இலவசமாகப் போடப்படும் நிலையில், மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,109 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. 5.21 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 96 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 83 சதவீதம் பேருக்கு இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்நாடுகளுக்குச் செல்வதில் இந்தியர்களுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படவிருக்கின்றன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களைக் கடந்தவர்களுக்கு, தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE