இந்தியாவில் முதன்முதலாக எக்ஸ்.இ திரிபு தொற்று!

By காமதேனு

பெருந்தொற்று கட்டுப்பாடுகளை நீக்கும் அளவுக்குக் கரோனா பாதிப்பிலிருந்து இந்தியாவின் பல மாநிலங்கள் மெல்ல விடுபட்டு வரும் சூழலில், ‘எக்ஸ்.இ’ திரிபு கரோனா வைரஸ் மும்பையில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கூடவே இன்னொருவருக்கு கப்பா திரிபு தொற்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. இருவருக்கும் தீவிரமான அறிகுறிகள் இல்லை. இந்தத் தகவலை பிருஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

பிரிட்டனில் ஜனவரி 19-ல் முதன்முதலாக எக்ஸ்.இ திரிபு கண்டறியப்பட்டது. அந்நாட்டில் இதுவரை 637 பேருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் திரிபானது, பிஏ1 மற்றும் பிஏ2 ஒமைக்ரான் வைரஸின் இணைப்புத் திரிபு ஆகும். ஒருவர் பல்வேறு திரிபு கரோனா வைரஸ்களின் தொற்றுக்குள்ளாகும்போது இப்படியான இணைப்புத் திரிபு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனாவின் எந்தத் திரிபை விடவும் எக்ஸ்.இ வகை திரிபு, மிக வேகமாகப் பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE