வெடித்துச் சிதறிய புது பைக்: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

By காமதேனு

மின்சார பேட்டரி வாகனங்கள் தீவிபத்துக்குள்ளாகும் சம்பவங்களுக்கு நடுவே, பெட்ரோலில் இயங்கும் பைக் தீப்பற்றி எரிந்ததுடன் வெடித்துச் சிதறிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்திருக்கிறது.

பைக்கின் உரிமையாளரான ரவிசந்திரா, அனந்த்பூர் மாவட்டத்தின் குண்டக்கல் மண்டலில் உள்ள நெட்டிகந்தி ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு முன்னர் தனது புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கை நிறுத்திவிட்டு, கோயிலுக்குள் சென்றார். சில விநாடிகளில் அவரது பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பைக்கின் பெட்ரோல் டேங்க்கும் வெடித்துச் சிதறியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தனர்.

பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் என்ன உடனடியாகத் தெரியவில்லை. 387 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைசூருவிலிருந்து நெட்டிகந்தி கோயிலுக்கு எங்கும் நிறுத்தாமல் பைக்கை அவர் ஓட்டிவந்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

புல்லட் என்று அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டு பைக் இப்படியான தீவிபத்தில் சிக்குவது அரிது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE