இலங்கைக்கு ரூ.7,500 கோடி இந்தியா கடனுதவி

By காமதேனு

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அரசுக்கு ரூ.7,500 கோடியை கடனுதவியாக வழங்கியிருக்கிறது இந்தியா.

கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உக்ரைன் போர் சூழல் மேலும் நெருக்கடியை தீவிரமாக்கியுள்ளது. விலைவாசி உயர்வு விண்ணை எட்டியுள்ளது. ஒரு கிலோ அரிசி 448 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 263 ரூபாய்க்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் 283 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 176 ரூபாய்க்கும், தங்கம் ஒரு சவரன் ரூ.1.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு குறைந்துவிட்ட நிலையில் உணவு, எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க இயலாத நிலை உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கை மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவின் உதவியை நாடி அந்நாட்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், கூடுதலாக ரூ.7,500 கோடி கடனுதவி கேட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடியை கடனுதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியா அளிக்க உள்ள கடன் தொகையை கொண்டு உணவு, எரிபொருள், மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு அவசர கடனுதவியாக ரூ.3,750 கோடியை இந்தியா வழங்கியது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்குவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE