அன்டார்க்டிகாவில் ஆராய்ச்சி: மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை!

By காமதேனு

அன்டார்க்டிகாவில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னெடுப்பில் தயாரான இந்த மசோதாவுக்கு இந்திய அன்டார்க்டிகா மசோதா எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் சார்பில் அன்டார்க்டிகாவில் 1981-ல் தொடங்கிய திட்டத்தின்படி இதுவரை 41அறிவியல் ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 41-வது பயணமாக, கடந்த ஆண்டு 23 பேர் கொண்ட இந்தியக் குழு அன்டார்க்டிகா சென்றது.

மசோதாவின் நோக்கம்

1959-ல் கையெழுத்தான அன்டார்க்டிக் ஒப்பந்தம், அன்டார்க்டிக் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக 1982-ல் கையெழுத்தான ஒப்பந்தம், அன்டார்க்டிக் ஒப்பந்தத்தின்படி அந்தக் கண்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 1998-ல் உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் ஆகியவற்றை இந்தியா பூர்த்தி செய்ய இந்த மசோதா உதவும் எனக் கருதப்படுகிறது.

1983-ல் தக்‌ஷிண் கங்கோத்ரி எனும் நிரந்தர ஆய்வு மையத்தை அன்டார்க்டிகாவில் இந்தியா நிறுவியது. பின்னர், 1988-ல் மைத்ரி, 2012-ல் பாரதி என மேலும் இரண்டு ஆய்வு மையங்கள் அங்கு நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் மைத்ரி ஆய்வு மையம், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இல்லை என சர்வதேச ஆய்வாளர்கள் கூறியிருப்பதால், அதன் கட்டமைப்பை மேம்படுத்தும் முடிவில் இந்தியா இருக்கிறது. இதுபோன்ற அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது நடந்துவரும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE