‘கிரிப்டோ கரன்சியை தடை செய்வதே இந்தியாவுக்கு நல்லது’

By காமதேனு

“கிரிப்டோ கரன்சியை தடை செய்வதே இந்தியாவுக்கு நல்லது” என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கூறியுள்ளார்.

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பங்களை ஏற்படுத்திவரும் நிலையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாயில் 30% வரியாக செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, கிரிப்டோ கரன்சியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக பலரும் கூறிவந்தனர்.

இதுகுறித்து மாநிலங்களவையில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “கிரிப்டோ கரன்சியை மத்திய அரசு அங்கீகரிக்கவும் இல்லை, தடை செய்யவும் இல்லை, வரி மட்டுமே வசூலிக்கப்படும்” என்று கூறினார். இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபிசங்கர், “கிரிப்டோ கரன்சி என்பது மக்களை ஏமாற்றம் மோசடி திட்டங்கள் போன்றது. கிரிப்டோ கரன்சிகளை ஒரு நாணயமாகவோ, பண்டமாகவோ சொத்தாகவோ வரையறை செய்ய முடியாது. அவற்றுக்கு உள்ளார்ந்த மதிப்புகள் கிடையாது. மக்களை ஏமாற்றும் பேன்சி திட்டம் போன்ற கிரிப்டோ கரன்சியை தடை செய்வதே இந்தியாவிற்கு நன்மை” என்று கூறினார்.

கிரிப்டோ கரன்சிக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, மத்திய அரசை யோசிக்க வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE