2ம் உலகப்போரில் மாயமான விமானம் இமயமலையில் கண்டுபிடிப்பு!

By காமதேனு

இரண்டாம் உலக போரின் போது மாயமான அமெரிக்க விமானம் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரை வியப்படைய வைத்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்தியா, சீனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் விழுந்து காணாமல் போனது. அந்த வகையில் சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945ம் ஆண்டு 13 பேருடன் புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம் சில மணி நேரங்களில் ரேடாருடனான தொடர்பை இழந்தது. மாயமான விமானம் எங்கு போனது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. அதேநேரத்தில், மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேச இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என தகவல் வெளியானது.

இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டில் விமானத்தை தேடும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். உயிருடன் இருந்த 2 பேர் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர். இந்நிலையில், மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகன் இறங்கினார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்பவர், விமான தேடுதல் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார். இதையடுத்து, தனது குழுவினருடன் குக்லெஸ் இமயமலை பகுதியில் முகாமிட்டு விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில், கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு நேற்று கண்டுபிடித்துள்ளது. பனி படர்ந்த பாறைகளுக்கு நடுவே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குக்லெஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கிளேட்டன் குக்லெஸ் கூறுகையில், "கடுமையான முயற்சிக்கு பின்னர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிதைந்த நிலையில் காணப்படும் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE