18வது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடக்கிறது

By KU BUREAU

புதுடெல்லி: 18வது மக்களவையின முதல் நாடளுமன்றக் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாகநடைபெற்றது. அதன் வாக்குகள் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பெரும்பான்மையை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜூன் 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ அரசு பதவியேற்றது.

இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்கள் புதிய எம்.பி.,க்களின் பதவியேற்பு விழா நடைபெறும். அதேபோல், புதிய சபாநாயகர் தேர்வும் நடைபெறும்.

தொடர்ந்து ஜூன் 27 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு பிறகு பிரதமர் மோடி தனது மந்திரி சபையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும்.

தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், அதன்பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெறும்.

தொடர்ந்து கூட்டத்தொடர் ஜூலை 3-ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE