ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐக்கு பின்னடைவு

By காமதேனு

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்துக்கு, மொரீஷியஸ் போலி நிறுவனங்களின் வாயிலாக, அந்நிய முதலீடு குவிந்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அமைச்சகத்தின்கீழான அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலமாக முறைகேட்டுக்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டது. லஞ்சமாகப் பெற்ற தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக, அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

வழக்கின் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தங்களுக்கு அளிக்கக் கோரி ப.சிதம்பரம், கார்த்தி உள்ளிட்டோர் சிபிஐ நீதிமன்றத்தில் கேட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு இணங்கிய நீதிமன்றம், வழக்கு ஆவணங்களை ப.சி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோருக்கு வழங்க உத்தரவிட்டது.

சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தை சிபிஐ நாடியது. அது தொடர்பான விசாரணைகள் ஏற்கெனவே முடிந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டோருக்கு வழக்கு ஆவணங்களை வழங்குவதற்கு எதிரான சிபிஐ-ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE