நாடாளுமன்றத்தை நோக்கி நகர முடிவு: விவசாயிகளின் புதிய வியூகம்

By எஸ்.எஸ்.லெனின்

விவசாயிகள் போராட்டம் ஒரு வருடத்தை முழுமை செய்ய உள்ளதால், தங்களின் அடுத்தகட்ட வியூகத்தை விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம், நெருங்கும் நவ.26 அன்றுடன் ஒரு வருட காலத்தை எட்டுகின்றது. அதற்குள் தங்கள் கோரிக்கைக்கு உரிய தீர்வை எட்டுமாறு, முன்னதாக மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு விதித்திருந்தனர். தற்போது அந்த அவகாசம் நெருங்கும் நிலைமையில், இன்று(நவ.9) கூடிய விவசாய சங்கங்கள் முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

பிரதான விவசாய சங்கங்களின் சார்பிலான, 9 உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டணியின் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவ.26 அன்று தொடங்கி ஓரிரு தினங்களில், கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் டெல்லி எல்லையிலிருக்கும் போராட்ட களங்களுக்கு வந்து விடுவர். பின்னர், நவ.29 அன்று அங்கிருந்து நாடாளுமன்றம் நோக்கி நடைபோட உள்ளனர். இந்த முன்நகர்வு இடையில் எங்கேனும் தடுக்கப்பட்டால், அதே இடத்தில் விவசாயிகள் ஒன்றாக அமர்ந்து மறியலில் ஈடுபட உள்ளார்கள்.

விவசாயிகள் தரப்பிலான போராட்டக் களம் அடுத்தக் கட்டத்துக்கு நகரும் அதே வேளையில், நெருங்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களால், எதிர் நடவடிக்கைகளை வீரியமாக மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலையில் மத்திய அரசு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE