அன்டிலியாவுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிப்பு!

By காமதேனு

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை மாளிகையான அன்டிலியா, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது.

வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பை போலீஸாரிடம் நேற்று(நவ.8) அளித்த தகவலை அடுத்து, அன்டிலியாவுக்கான பதட்டம் பற்றியுள்ளது. அன்டிலியா அமைந்துள்ள பகுதியிலிருந்து சில கி.மீ தொலைவில், மற்றொரு வாகனத்தில் வந்த 2 நபர்கள், டாக்சி ஓட்டுநரை குறுக்கிட்டு வழி கேட்டிருக்கிறார்கள். அன்டிலியா செல்வதற்கான பல்வேறு வழித்தடங்கள் குறித்து அவர்கள் மாறிமாறி விசாரித்தனராம். அந்த நபர்கள் உருதுவில் பேசியதாகவும், அவர்கள் வந்த காரில் கனமான பைகள் இருந்ததாகவும், இருவரின் நடவடிக்கையும் சந்தேகத்துக்கு உரியதாகத் தென்பட்டதாகவும் அந்த டாக்சி ஓட்டுநர் பல்வேறு தகவல்களை தந்திருக்கிறார்.

முகேஷ் அம்பானி

இதையடுத்து நேற்று இரவு மும்பை போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும், அம்பானி வீட்டுக்கான பிரத்யேக தனியார் பாதுகாப்பு வளையங்களும் அன்டிலியாவைச் சுற்றி அதிகரிக்கப்பட்டுள்ளன. அன்டிலியா வழியாக செல்வதற்கான சாலை வழிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி, சந்தேகத்துக்கு இடமானவர்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் அன்டிலியா அமைந்துள்ள பகுதியில் வெடிபொருட்கள் நிறைந்த வாகனமும், அதில் அம்பானி குடும்பத்தினருக்கான மிரட்டலும் கைப்பற்றப்பட்டன. அவை தொடர்பான விசாரணையில், பல்வேறு போலீஸ் அதிகாரிகள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை சிக்கி வருகின்றனர். மகாராஷ்டிராவை உலுக்கிவரும் இந்த விவகாரத்தின் மத்தியில், மீண்டும் அன்டிலியாவுக்கான அச்சுறுத்தல் தொடர்பாக மும்பையில் பதட்டம் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE