‘அக்னி-5’ ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி!

By எஸ்.எஸ்.லெனின்

இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட கண்டம் தாவும் ஏவுணையான அக்னி-5, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெற்றியடைந்தது.

அணுசக்தி ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணை சோதனை, தேசத்தின் பாதுகாப்பு முன்னெடுப்புகளில் முக்கியத்துவம் பெறுகிறது. போர் நேர்ந்தால் அணுசக்தி படைக்கலன்களை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்ற தேசத்தின் கொள்கைக்குள், இந்த அக்னி ஏவுகணையும் அடங்கும் என பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின் அப்துல்கலாம் தீவில், புதன் இரவு (அக்.27) மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது. 5 ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கும் இலக்கை துல்லியமாக அக்னி-5 ஏவுகணை தாக்கி அழித்தது. அக்னி-5, டிஆர்டிஓ அமைப்பின் மூலம் முழுவதும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கம் பெற்ற ஏவுகணை ஆகும்.

படைக்கல அணிவகுப்பில் அக்னி ரக ஏவுகணை

லடாக் பகுதியில், இந்திய-சீன எல்லையை முன்னிறுத்தி இரு நாடுகள் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை சீனா நிறைவேற்றி இருப்பது குறித்து, இந்தியா நேற்று கவலை தெரிவித்தது. இரு நாடுகள் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில், திட்டவட்டமாக வரையறுக்கப்படாத எல்லையை தன்னிச்சையாக சீனா தீர்மானிப்பதற்கு அதன் புதிய சட்டம் வழி செய்யும். இந்தப் பதட்டச் சூழலின் மத்தியில், இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE