இந்தியாவில் கரோனா தொற்று 14% அதிகரிப்பு

By காமதேனு டீம்

இந்தியாவில் கரோனா தொற்று, வியாழக்கிழமை (செப்டம்பர் 9) அன்று முந்தைய நாளைவிட 14 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 43,263 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 338 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

கேரளத்தில் புதிதாக 30,196 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் 24 மணி நேரத்துக்குள் 181 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1,71,295 பேரின் மாதிரிகளைச் சோதித்ததில், 17.63 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் தெரியவந்திருக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் புதிதாக நோய்த்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 4,174. அம்மாநிலத்தில் கரோனா தொற்றால் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அகமது நகர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாகப் புதிதாக 786 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. புணே மாவட்டத்தில் 529 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மும்பையில் கோவிட்-19 மூன்றாவது அலை நிலவுகிறது என்று மாநகர மேயர் கிஷோரி பெத்நேகர் கூறியிருக்கிறார்.

டெல்லியில் புதிதாக நோய்த்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 41. மொத்தம் 14,38,082 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,42,51,101 பேர் ஒரு தவணை அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவில் 2019 டிசம்பரில் நோய்த் தொற்று ஏற்பட்டது முதல், இதுவரையில் உலகம் முழுவதும் 45,29,715 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் அமெரிக்காவில் 6,52,654 பேரும், பிரேசிலில் 5,84,421 பேரும், இந்தியாவில் 4,41,749 பேரும், மெக்ஸிகோவில் 2,65,420 பேரும், பெரு நாட்டில் 1,98,595 பேரும் கரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE