நெகிழ்ச்சி... அந்த ஆசிரியர்களை மாற்றாதீர்கள்... ஆட்சியரிடம் முறையிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்!

By காமதேனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரை, அதே பள்ளியில் பணி செய்ய அனுமதிக்குமாறு அரசுப்பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வேளாண்மை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் பாலச்சந்தர் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை மீண்டும் தங்கள் பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் அந்த பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று பள்ளி தேர்வை புறக்கணித்து விட்டு வந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வகுப்பறை - மாதிரிப் படம்

அப்போது தங்கள் பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை சிலர் ஜாதி, மதம் பாகுபாடு என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவர்களை பணியிட மாற்றம் செய்து விட்டனர். 15 ஆண்டுகளாக தங்கள் பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்களும் மீண்டும் தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும். இல்லை எனில் தங்கள் அனைவரையும் அவர்கள் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்

சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துவதோடு, பள்ளியில் தவறு செய்யும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்யும் வரை தேர்வு எழுத மாட்டோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE