அதிர்ச்சி வீடியோ... உணவில் விஷம்... 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

By காமதேனு

தெலங்கானாவில் பழங்குடி மாணவர்கள் விடுதியில் உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம், மன்னனூரில் பழங்குடி மாணவர்கள் விடுதி உள்ளது. இதில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதுடன் சுவாசிப்பதில சிரமம் ஏற்பட்டது. அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் விடுதி ஊழியர்கள் ஒரு லாரி மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நாகர்கர்னூல் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெறும் மாணவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும், அசுத்தம் நிறைந்ததாகவும் இருப்பதாக புகார் கூறினர். பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினர்.

இந்த நிலையில் லாரியில் மாணவ, மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு வந்து இறக்கப்படுவதும், அப்போது மாணவிகள் சிலர் வலியால் துடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரலானது.

இதைப் பார்த்து, ஆடுகளைப் போல மாணவ, மாணவிகளை லாரியில் எதற்கு ஏற்றி வந்தனர் என்றும், 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவில்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்னர். மாணவ, மாணவியர் சாப்பிட்ட உணவு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE