பணியில் அலட்சியம்: கொடைக்கானல் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம்

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: பணியில் அலட்சியமாக இருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் அன்பில் மகேஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பாரதி அண்ணா நகர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் வனிதா. உதவி தலைமையாசிரியர் சேது முருகன். இருவர் மீதும் பள்ளிக்கு சரிவர வருவதில்லை என்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய உண்மை தன்மை கண்டறியும் ஆய்வில் இருவர் மீதும் சொல்லப்பட்ட புகார்கள் உண்மை என தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், புகாருக்குள்ளான தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகியோர் மீதான நடவடிக்கை குறித்து கேட்டார். மேலும், பணியில் அலட்சியமாக இருந்த தலைமையாசிரியர் வனிதா, உதவி தலைமையாசிரியர் சேது முருகன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தலைமையாசிரியர் வனிதா, அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டு பள்ளம் பகுதியில் உள்ள பள்ளிக்கும், உதவித் தலைமையாசிரியர் சேது முருகன், பூண்டி பகுதியில் உள்ள பள்ளிக்கும் இன்று (செப்.10) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE