“போதையின் பாதிப்புகளை மாணவர்கள் அறியச் செய்வது ஆசிரியர்களின் கடமை” - அன்பில் மகேஸ்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: "போதையின் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை" என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

ராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆண்கள் பள்ளியில் நபார்டு திட்டத்தில் நடைபெற்று வரும் வகுப்றை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாகச் சென்று பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறேன். இதுவரை 150 தொகுதிகளுக்கு மேல் சென்று பள்ளிகளில் ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டுள்ளேன். மாதம் தோறும் நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனான கூட்டத்திலும் இது குறித்து பேசி வருகிறேன். ராஜபாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் கேட்டுள்ளனர்.

அதைச்செய்து கொடுப்போம். ராஜபாளையம் தொகுதியில் எம்எல்ஏ-வான தங்கபாண்டியன் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். பள்ளிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்து வருகிறோம். வயநாடு நிலச்சரிவுக்கு தமிழக முதல்வர் முதல் நபராக ரூ.5 கோடி நிவாரணம் அறிவித்து, இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை மீட்புப் பணிக்கு அனுப்பி உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும்.

பள்ளி அருகே போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. எனக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அமைச்சர் என்ற முறையிலும், தந்தை என்ற அடிப்படையிலும் அவர்களுக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறேன். இது குறித்து சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

அமைச்சரின் ஆய்வின் போது எம்எல்ஏ-வான தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி தொகுதியில் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE