அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை: 3 ஆயிரம் கூடுதல் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு!

By காமதேனு

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு மே 18-ம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3,000 உபரி பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.இதற்கிடையே, கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தது. இதனால் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு 18.5.2022 முதல் 17.5.2023 வரை மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட ஆசிரியா்களின் பணிக்காலம் கடந்த 18-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் அவா்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்குவதற்கான விரைவு ஆணையை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

இதன்படி அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு மே 18-ம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பும் ஊதியமும் வழங்கப்படும். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்த ஆசிரியர்களுக்கான பணி நீடிப்பும் தொடர்ந்து வழங்கப்படும். இந்தநிலையில் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE