பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது: மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

By காமதேனு

தமிழ்நாட்டில் 8.17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 12 ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13 ல் தொடங்கி ஏப்.3-ம்தேதி வரை நடந்தது. இந்த தேர்வு எழுத 8,36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.

விடைத்தாள்கள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இப்பணியில் சுமார் 50,000 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்பணி முடிந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டன.

தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் நீட் தேர்வை கருத்தில் கொண்டு தேர்வு முடிவு வெளியீடு மே 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE