பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆக. 1 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

By KU BUREAU

சென்னை: இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்ற கல்வி ஆண்டுக்கான (2023-2024) பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அத்தேர்வை 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக மே 9-ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 1-ம் தேதி வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE