தேசிய விண்வெளி தினத்தை கொண்டாட கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

சென்னை: தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு கல்லூரிகளில் கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இன்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; சந்திரயான்-3 விண்கலம் நிலவில் 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23-ம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தொடர்ந்து இந்த நாளை தேசிய விண்வெளி தினமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதில் இளைஞர்களை ஈடுபடுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் நோக்கங்களுடன் முதல் தேசிய விண்வெளி தினத்தை நாடு முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இதுதொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள், விண்வெளி சார்ந்த சிந்தனை திறன் போட்டிகளை நடத்த வேண்டும்.

மேலும், விண்வெளித் துறை சார்பில் நடத்தப்படும் ரோபோட்டிக்ஸ் போட்டிகளிலும் பங்கேற்க உயர்கல்வி நிறுவனங்களை சார்ந்த மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதுசார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை யுஜிசி இணையதளத்தில் (uamp.ugc.ac.in) பகிர வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE