பிஆர்க், பி.பிளானிங் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

By KU BUREAU

சென்னை: பிஆர்க், பி.பிளானிங் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்தியஉயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம்கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரியில் நடத்தப்பட்டு, முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வு ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 420 மையங்களில் 52,935 மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. மாணவர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர இருகட்ட முதன்மை தேர்வுகளிலும் தமிழக மாணவர் ஆர்.முத்து (பி.ஆர்க்) உட்பட 4 பேர்தேசிய அளவில் முழு மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ்விரு தேர்வுகளில் மாணவர்பெற்ற அதிக மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையத்தில் அறியலாம் என்று என்டிஏ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE