அரசுப் பள்ளிகளுக்கான வேலை நேரம் மாற்றம் - புதுச்சேரி அரசு அறிவிப்பு

By KU BUREAU

புதுச்சேரி: அரசுப்பள்ளிகள் செயல்படும் புதிய வேலை நேரத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. காலையில் ஒரு இடைவேளையும், மதிய உணவு இடைவேளை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12.25 மணி வரை செயல்படுகின்றன. அதன் பிறகு 1.30 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன. காலை 10.45 முதல் 10.55 வரை காலை இடைவேளையும், மதியம் 12.25 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளையும், மாலை 2.50 முதல் 3 மணி வரை மதிய இடைவேளையும் விடப்பட உள்ளது.

மதிய உணவுக்கு முன்பாக ஒவ்வொரு வகுப்பும் 45 நிமிடங்களும், மதிய உணவுக்கு பின்னர் ஒவ்வொரு வகுப்பும் தலா 40 நிமிடங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாளொன்றுக்கு 8 வகுப்புகள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற ஜூலை 15ம் தேதி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE