சென்னை பல்கலைக்கழகம் சார்பில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

By KU BUREAU

சென்னை: அமெரிக்க துணை தூதரக மையத்துடன் இணைந்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலை. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள அமெரிக்கதுணை தூதரகத்தின் அமெரிக்க மையத்துடன் இணைந்து உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகள் மற்றும்பள்ளி மாணவிகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் தொடர்பான திறன்மேம்பாட்டு பயிற்சியை சென்னை பல்கலை அளிக்க இருக்கிறது.

இதற்கான பயிலரங்கம் பல்கலைக்கழகத்தின் கிண்டிவளாகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஆசிரியைகளுக்கான பயிலரங்கம் ஜூலை 9 முதல் 11 வரையும், மாணவிகளுக்கான பயிலரங்கம் ஜூலை 19 முதல் 30 வரையும் நடைபெறும். இப்பயிலரங்கில் பங்கேற்க ஆசிரியைகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிஅனுபவமும், பணிக்காலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும் இருக்க வேண்டும். 20 பேர் அனுமதிக்கப்படுவர்.

மாணவிகளைப் பொருத்தவரை, அரசு மாதிரி பள்ளி அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 13 முதல் 16 வரை. மொத்தம் 20 பேர் பங்கேற்கலாம்.

இந்த திறன் மேம்பாட்டு பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியைகள் மற்றும் பள்ளிமாணவிகள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப் பட்டுள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

தகுதியான நபர்களை சென்னைபல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அமெரிக்க கல்வி மையநிபுணர்கள் அடங்கிய குழுவினர் தேர்வு செய்வர். மேலும் விவரங்களுக்கு சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியை ரீட்டா ஜான் என்பவரை 95662 45138 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE