கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களைத் திருத்த ஜூலை 3 முதல் 5 தேதி வரை அவகாசம்

By சி.கண்ணன்

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 17,497 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரை திருத்தம் இருந்தால் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில் நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் கடந்த 3ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த 28ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 14,497 பேரும், பி.டெக்., படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, தவறு செய்திருந்தால், அதற்காக திருத்தம் மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் வரும் ஜூலை 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை இறுதியில் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE