மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும்

By கரு.முத்து

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வியாளர் சங்கமத்தின் நிறுவனர் திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் சிகரம் சதீஷ்குமார், இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தன்னுடைய கோரிக்கை குறித்து சதீஷ்குமார் கூறியதாவது: “தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்னும் வாக்குறுதியோடு தேர்தலை சந்தித்து, தேர்தலில் பெருவெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறிய திமுக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உடனடியாக இல்லாத நிலையில், தற்போது தேர்வும் நாடெங்கிலும் நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மருத்துவக் கல்லூரியை நோக்கி மாணவர்கள் நடைபோடத் தொடங்கிவிட்டனர்.

தற்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் 541 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இது அரசுப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்கும், வரும் நாட்களில் மருத்துவத் துறையில் சேவை உள்ளத்துடன் பணியாற்றும் மருத்துவர்களைப் பெறுவதற்கான வாய்ப்பாகவும் கொண்டாடி மகிழ வேண்டும்.

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து இன்னும் உறுதியாகாத நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கடந்த அரசு வழங்கிய 7.5% இடஒதுக்கீட்டை தற்போது 15% ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட வேண்டுமென்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இது ஒன்றே பல்லாண்டுகளாக நீட்டுக்காக மட்டுமே படித்துக்கொண்டும், பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் மாணவர்களோடும், நல்ல வசதி படைத்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களோடும் போட்டியிடும் அரசுப் பள்ளி மாணவர்களைக் காக்கும்.

மத்திய அரசிடம் தலையாட்டிக் கொண்டிருந்த கடந்தகால அரசே 7.5% இடஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியபொழுது, தலைநிமிர்ந்து நிற்கும் தற்போதைய அரசு 15% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதை, மீண்டும் ஒருமுறை கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், அதுவரை 85% இடங்களை விட்டுக்கொடுத்த நாம், 15% இடங்களையாவது சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாடு அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல் அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதை அரசுப்பள்ளி மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றோம்.

தேசிய அளவில் நடைபெறும் ஒரு தேர்வு தமிழ்நாட்டுக்கு கூடாது என்பதாக இல்லாமல், அவை மாநிலத்தின் உரிமையைப் பாதிக்கக் கூடாது என்னும் நிலையில், நம் மாநில அரசு இந்த விசயத்தைக் கையாள்வதே சரியான நிலைப்பாடாக அமையும். அதனால் எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்” என்று சதிஷ்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE