அரசுப் பேருந்தில் கப்பலோட்டிய தமிழன்!

By கா.சு.வேலாயுதன்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவை, சிறப்பாக கொண்டாடி வருகிறது தமிழக அரசு. அதையொட்டி வ.உ.சி-க்கு சிறப்பு செய்யும்விதமாக 15 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் அந்த சுதந்திரப் போராட்டத் தியாகியின் உன்னதங்களை பல்வேறு கொண்டாட்டங்கள் வாயிலாக ஊருக்குச் சொல்ல ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், பேருந்தில் மக்களுக்கும், மாணவ - மாணவியருக்கும் காண்பிக்க வ.உ.சி வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து காட்சிப்படுத்தியுள்ளது.

கண்காட்சியைப் பார்வையிடும் மாணவியர்

வ.உ.சியின் குடும்ப வாழ்க்கை, சுதந்திரப் போராட்டத்தில் அவர் பங்கேற்றவை, அவரது சமுதாயப் புரட்சிகள், அவருடைய தேசபக்தியூட்டும் படங்கள் உள்ளிட்டவை பேருந்தின் பின்புறமும் பக்கவாட்டிலும் படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி பேருந்து, கோவை காந்திபுரம் நகரப்போருந்து நிலையத்தில் முதலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அடுத்ததாக அரசு மேல்நிலைப்பள்ளி, தலைமைத் தபால் அலுவலகம், சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, டவுன் ஹால், செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இந்தப் பேருந்து காட்சிப்படுத்தப்பட்டது. கோவை கோட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தலைமையகம் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பேருந்தின் வாயிலாக, வ.உ.சி. வாழ்க்கை வரலாறு கண்காட்சியை இன்று ஒரேநாளில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE