பாலியல் வன்கொடுமையில் சிறுமி கர்ப்பம்; தொழிலாளிக்கு வாழும் வரை ஆயுள் தண்டனை- போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பாலியல் வன்கொடுமையில் சிறுமி கர்ப்பமானதால் டிங்கரிங் தொழிலாளிக்கு வாழும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி தவளக்குப்பத்திலுள்ள அபிஷேகபாக்கத்தைச் சேர்ந்தவர் டிங்கரிங் வேலை செய்யும் சுரேஷ் (42), இவர் 15 வயதுடைய சிறுமியை கடந்த 2023ல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து தவளக்குப்பம் போலீஸில் புகார் தரப்பட்டு போலீஸார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

அதையடுத்து இவ்வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். இவ்வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சுமதி இன்று தீர்ப்பளித்தார். போக்சோ சட்டத்தின் பிரிவு 6ன் கீழ் சுரேஷ் இயற்கையாக வாழும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கவேண்டும். அத்துடன் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE