சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

By இரா.நாகராஜன்

செங்குன்றம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை தண்டனை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி என்கிற ராஜமாணிக்கம் (72). இவர் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ராஜமாணிக்கத்தின் உடல்நிலை சமீபத்தில் மோசமானது என தெரிகிறது.

ஆகவே, ராஜமாணிக்கம் கடந்த 9-ம் தேதி சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ராஜமாணிக்கம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE