சென்னை: வியாசர்பாடியை சேர்ந்த தூய்மை பணியாளரான சுமதி (37), அண்மையில் தி.நகர் பிரகாசம் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டார். சில நாட்களிலேயே பெண் பணியாளர் வேண்டாம், ஆண் பணியாளர் தான் வேண்டும் என நிர்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து, சுமதி பணியிலிருந்து நிறுத்தப்பட்டார்.
ஆனால், அவர் பணி செய்த நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுள்ளது. பல முறை கேட்டும் சுமதிக்கான நிலுவை சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர், கடந்த 4-ம் தேதி மாலை சம்பந்தப்பட்ட அலுவலக நுழைவாயிலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமதி, கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மனித வள மேலாண்மை மேலாளரான பழைய பெருங்களத்தூரை சேர்ந்த பிரீத்தி (40) என்பவர் கைது செய்யப்பட்டார். டெல்லி சென்றிருந்த அவரை அங்கு சென்று போலீஸார் கைது செய்தனர்.