அவிநாசி அருகே மீண்டும் பயங்கரம்: வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை

By இரா.கார்த்திகேயன்

அவிநாசி: அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம்(75). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (மார்ச் 13) காலை நீண்ட நேரமாகியும் வயதான தம்பதியர் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது தம்பதியர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது தங்க நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி பாளையம் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 நாட்களைக் கடந்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், தற்போது வயதான விவசாய தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவிநாசியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS