விருதுநகர்: சாத்தூர் அருகே மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). இருவரும் பட்டாசுத் தொழிலாளர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை இருவரும் சாத்தூர் அருகே உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர்.
அப்போது, மது போதையிலிருந்த பொன்னுச்சாமிக்கும், மனைவி முனீஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி உரல் கல்லால் முனீஸ்வரி தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின், தனது பைக்கிலிருந்த பெட்ரோலை பிடித்து வந்த பொன்னுச்சாமி, முனீஸ்வரியின் உடலில் ஊற்றித் தீவைத்தார். அப்போது, பொன்னுச்சாமி மீதும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து முனீஸ்வரி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயமடைந்த பொன்னுச்சாமியை போலீஸார் கைது செய்து பின்னர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
» ஓசூர் அருகே பரிதாபம்: குட்டையில் விழுந்த மாணவர், மீட்க முயன்ற ஹெச்.எம். உயிரிழப்பு
» காங்கயம் அருகே கரூர் நகை வியாபாரியிடம் போலீஸார் எனக் கூறி ரூ.1.10 கோடி கொள்ளை