செய்யாறில் சிறுமி பாலியல் வன்கொடுமை: 65 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

By KU BUREAU

திருவண்ணாமலை: செய்யாறில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காரணை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணப்பன் (65). இவர், அதே கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அச்சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கண்ணப் பனை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியில் கைது செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், கண்ணப்பனுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE