அதிகாலையிலேயே மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு: மதுரையில் மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி

By KU BUREAU

மதுரை: பெரியார் பேருந்து நிலையம் மேலவாசல் குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (38). மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பாண்டிச் செல்வி (30). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவிக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், அதிகாலையில் மனைவியிடம் மது குடிக்க கருப்பசாமி பணம் கேட்டுள்ளார். மறுத்த பாண்டிச் செல்வியை கருப்பசாமி கத்தியால் குத்திவிட்டு தப்பினார். படுகாயமடைந்த பாண்டிச் செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக திடீர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கருப்பசாமியை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE