ராசிபுரம் அரசுப் பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம் - பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

By KU BUREAU

நாமக்கல்: ராசிபுரம் அரசுப் பள்ளி கழிப்பறையில் மாணவர் உயிரிழந்து கிடந்தார். இதனிடையே, மாணவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பெயின்டர் பிரகாஷ். இவரது மகன் கவின் ராஜ் (14). இவர் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்ற கவின்ராஜ் அங்கு மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். தகவல் அறிந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் கவின்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவின் ராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவர் உயிரிழப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், இப்பகுதியில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று மாலை மீ்ண்டும் ராசிபுரம்-நாமக்கல் சாலையில் எல்ஐசி அலுவலகம் முன்பு கவின்ராஜின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களைச் சமாதானம் செய்து, மறியலை கைவிட செய்தனர். இந்நிலையில், மாணவர் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்களிடம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE