ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சாவை அந்நாட்டு ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக போதை பொருட்கள் கடத்தப்பட்டு, பின்னர் சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாக இலங்கை கடற்படையினர் அந்நாட்டு ராணுவத்தினருக்கு அளித்த தகவலையடுத்து யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை மாலை கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புரம் பகுதியில் ராணுவத்தினரின் வாகன சோதனையின் போது, சந்தேகத்துக்கு இடமான ஒரு லாரியை சோதனையிட்டதில், லாரியிலிருந்து 200 பண்டல்களில் 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், லாரியிலிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டல்கள் தமிழகத்திலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
» தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்
» கன்னியாகுமரியில் மார்ச் 2-ல் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கர்மயோகினி சங்கமம்’