தருமபுரி: கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் வெதரம்பட்டி ஊராட்சி ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி பொருட்கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் நேரத்தில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாக, வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில், குடோனில் வேலை செய்து கொண்டிருந்த செண்பகம், திருமலர், மஞ்சு ஆகிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கிய குடோன் பகுதிக்கு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த கம்பை நல்லூர் போலீஸார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.