கோவை: கிராஸ்கட் சாலையில் செயல்பட்டுவரும் நகைக் கடைக்கு சில நாட்களுக்கு முன் காரில் வந்த இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் கடை ஊழியர்களிடம் தாங்கள் தொழிலதிபர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
பண்டிகைக்கு அன்பளிப்பாக வழங்க வைர நெக்லஸ் வேண்டும் என தெரிவித்தனர். பின்னர், ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸ் தேர்வு செய்து பெற்றுக் கொண்டனர். அந்த தொகைக்கான காசோலையை கடை ஊழியர்களிடம் கொடுத்தனர். கடை ஊழியர்கள், காசோலை யுடன் முகவரி மற்றும் தொடர்பு எண்களை பெற்றுக் கொண்டனர். மறுநாள் காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சியான ஊழியர்கள் நகை வாங்கியவர்கள் வழங்கிய எண்ணில் தொடர்பு கொண்டபோது, செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப் பட்டிருந்தது. இதையடுத்து, நகைக்கடை நிர்வாகம் சார்பில், காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் தவுலத் நிஷா வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை தேடி வருகிறார்.
அவர்கள் போலி முகவரி கொடுத்து ஏமாற்றிச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
» ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் நகை பை திருட்டு: காவலர் கைது
» காட்பாடி அருகே தனியார் கல்லூரி பேருந்து தீயில் எரிந்து சேதம்!